வெள்ளி, 17 அக்டோபர், 2025

தீபாவளி ஒரு அறிவியல் கண்ணோட்டம், மண்ணின் மைந்தனுக்கு ஒரு மரணவிழா

 தீபாவளி ஒரு அறிவியல் கண்ணோட்டம்

மண்ணின் மைந்தனுக்கு ஒரு மரணவிழா [1]

 

இந்த பூமி எப்படித் தோன்றியது?

இதில் நிலம் எவ்வாறு உருவானது?

இதில் கடல் எவ்வாறு உருவானது?

இதில் உயிரினங்கள் எப்படித் தோன்றின?

            இதுபற்றி நாற்பது சதுர்யுகங்களுக்கு முன்னர், அதாவது சுமார் கோடி வருடங்களுக்கு முன்னர் இரண்யாட்சதன் என்ற விஞ்ஞானி ஆய்வு செய்தான்.  இந்த ஆய்விற்காக பூமியின் பரந்துபட்ட நிலப் பரப்பையும் ஆழமான கடலின் ஒவ்வொரு பகுதியையும் நுணுக்கமாக ஆராய வேண்டியிருந்தது.  இதற்காக இரண்யாட்சதனுக்கு அதிகமான ஆய்வுக் கூடங்கள் தேவைப்பட்டன.  அதிகமாக ஆய்வாளர்களும் தேவைப்பட்டனர்.  இவற்றிற்கெல்லாம் பெரும் பணம் தேவைப் பட்டது.

எனவே இவன் தேவர்கள் என்று அழைக்கப்பட்ட செல்வந்தர்களை அடித்துத் துன்புறுத்தி, அடிமை செய்து, அவர்களது செல்வத்தைக் கொள்ளையடித்தான்.  அடிமையான தேவர்களை எல்லாம் தனது ஆய்வின் களப்பணிக்குப் பயன்படுத்திக் கொண்டான்.  அவர்களது செல்வத்தை எல்லாம் தனது ஆய்விற்காகச் செலவு செய்தான்.  இரண்யாட்சதன் தனது ஆய்விற்காக பூமியின் கடலோர நிலப்பரப்புகளிலும், மிகப்பெரிய மலைத் தொடர்களிலும் மிகப்பெரிய ஆய்வகங்களை அமைத்து, நிலத்தின் அடியில் முப்பது நாற்பது கிலோமீட்டர்களுக்குக் கீழே நிலம் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்தான். 

இதனால் கடலும் நிலமும் சேரும் இடங்களில் உள்ள நிலத்தின் ஆணிவேர்பகுதிகள் ஆட்டம் கண்டன.  பெரும் பூகம்பம் ஏற்பட்டுப் பூமியின் மேற்பரப்பில் உள்ள பெருங்கண்ட நிலத்திட்டுகள் அப்படியே பாய்போல் சுருண்டு கடலில் மூழ்கின. இந்தப் பூலோகம் அழிவை நோக்கிச் செல்வதை அறிந்த ’இருடிகள்’ என்று அழைக்கப்பட்ட விஞ்ஞானிகள் அனைவரும் ஒன்று கூடி இந்த நிகழ்வு முழுவதையும் செயற்கைக்கோள்கள் படங்கள் அனைத்தையும் ‘சூப்பர்‘ கணினியில் AI தொழில்நுட்பத்தின் மூலம் ஒருங்கிணைத்து ஆய்வு செய்தனர்.  ஆய்வு முடிவுகளைத்  திரைப்படங்களாக மாற்றித் திரையிட்டுப் பார்த்தனர்.   ஒரு பெரிய தண்ணீர் குளத்தின் மேல் பாய் விரித்துப் போடப்பட்டது போல் நிலப்பரப்பு தட்டையாகக் காட்சி அளித்தது.  பின்னர் அந்தப் பாயானது அப்படியே சுருண்டு சிறிது சிறிதாகத் தண்ணீரில் மூழ்குவது போன்று இருந்தது.  அந்தக் காட்சியில் பூமியில் உள்ள பெருங்கண்ட நிலப்பரப்புகள் அப்படியே சுருண்டு பூமியில் உள்ள கடலுக்குள் செல்வதைக் காண முடிந்தது.

இருடிகளும் தேவர்களும் ஒன்றுகூடி, இரண்யாட்சதனின் இந்த ஆய்வை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர்.   உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் அழிவை உண்டாக்கும் இந்த ஆய்வை நிறுத்த வேண்டும்.  அதற்கு இரண்யாட்சதனை உடனடியாகச் சிறைப்பிடித்து மரணதண்டனை வழங்க வேண்டும்.  இவ்வாறு செய்வதைத் தவிர வேறு வழியில்லைகடலில் உள்ளே மூழ்கிக் கொண்டிருக்கும்  நிலப்பரப்பை மீண்டும் கடலுக்கு மேலே கொண்டுவந்து பூமியை இந்தப் பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும்.  இதற்காக, அப்போது பூமியை ஆண்டு வந்த மகாவிட்ணு என்ற மன்னனிடம் சென்று முறையிட்டனர்.

மன்னன் மகாவிட்ணுவும், தனது மக்களையும், மண்ணையும் காக்க வேண்டி இருடிகள் என்று அழைக்கப்பட்ட விஞ்ஞானிகளுடனும், தேவர் என்று அழைக்கப்பட்ட செல்வந்தர்களுடனும் கலந்து ஆலோசித்தான்.  இரண்யாட்சதன், பெருங்கண்டங்களின் நிலத்திட்டுகள் ஒன்றாகச் சேரும் இடங்களில் நிலத்தின் அடியில் மிகவும் ஆழமான, ஆணிவேர்ப் பகுதிகளில் பெருந்துளைகள் இட்டதால் நிலப்பகுதி ஆட்டம் கண்டு கடலில் மூழ்குவதை இருடிகள் மகாவிட்ணுவிடம் எடுத்துக் கூறினர்.

 

இதனைத் தடுக்க, பெருங்கண்டங்களின் (கடல்)ஓரப்பகுதிகளை முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்துவதைத் தவிர வேறுவழியில்லை என்றும் எடுத்துக் கூறினர்.  மன்னன் மகாவிட்ணு உடனடியாக இரண்யாட்சதனை இப்பூலோக எதிரி எனப் பிரகடணம் செய்தான்.  இரண்யாட்சதனைக் கைது செய்து அவனுக்கு மரணதண்டனை வழங்கப்படும் என அறிவித்தான். 

பூமியின் மன்னனான மகாவிட்ணு தான் வழங்கிய ஆணையை நிறைவேற்ற, முப்பது நாற்பது கிலோமீட்டர்களுக்குக் கீழே கடலின் அடியில் இருந்த மிகப்பெரிய ஆய்வகத்திற்குச் சென்று,  அதில் இருந்து கொண்டு இரண்யாட்சதனுடன் போரிட்டான்.  போரின் முடிவில் கடலின் அடி ஆழத்தில் ஒழிந்திருந்த இரண்யாட்சதன் இறந்தான்.  மன்னன் மகாவிட்ணு வெற்றி வாகை சூடினான்.

இரண்யாட்சதனை வெற்றி கண்ட மகாவிட்ணு, உடனடியாக கடலுக்கு அடியில் இருந்த அந்த மிகப் பெரிய ஆய்வகங்களின் துணையுடன், மிகப்பெரிய நீண்ட தூண்களை உருவாக்கினான்.  அந்தத் தூண்களைக் கடலில் மூழ்கிய நிலப் பரப்பின் ஓரங்களில் முட்டுக் கொடுத்து நிலப்பரப்புகளை மீண்டும் கடல் மட்டத்திற்கு மேலே கொண்டு வந்தான்.    இதனால் பூமியின் மேற்பரப்பில்  புதிதாக ஆல்ப்சு மலைத் தொடர்கள் தோன்றின.  நிலப்பரப்பின் கடலோரப் பகுதிகள் கடலிலிருந்து மேலே வந்தன.

இந்த நிகழ்வு முழுவதையும் செயற்கைக்கோள்கள் படங்கள் அனைத்தையும் ‘சூப்பர்‘கணினியில் AI மூலம் ஒருங்கிணைத்து ஆய்வு செய்தனர்.  அவற்றைத் திரையிட்டுப் பார்த்தபோது, ஒரு பெரிய குளத்தில் தண்ணீருக்குள் சுருண்டு மூழ்கிய பாயைப் பன்றி (JCB) ஒன்று தனது வாயால் நெம்பி மேலே தூக்குவது போன்று தெரிந்தது. 

முன்பு பாய் போல் தட்டையாக இருந்த நிலப்பரப்பானது, இப்போது ஆங்காங்கே கிழிந்து துண்டுதுண்டாகக் காட்சியளித்தது.  ஆல்ப்சு மலைத் தொடர்களும், இமயமலைகளும், இந்திய சாத்பூரா மலைத் தொடர்களும் காசுப்பியன் கடல்களும் புதிதாகத் தோன்றியிருந்தன.

 

ஒன்றாக இருந்த பெரு நிலப்பரப்பு இப்போது கிழிந்து பிரிந்து ஆப்பரிக்கா, ஐரோப்பா, ஆசியா, அமெரிக்க கண்டங்களாக மாற்றமடைந்து ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்ல ஆரம்பித்தன.

ஆனால் “ஒரு நல்லது அழியும் போது ஒரு கெட்டது பிறந்தது“!  ஒரு மாபெரும் அழிவில் இருந்து பூமி மீண்டுகொண்டிருந்தபோது, ஒரு விபரீதமும் நடந்தது.  அதை விபரீதத்தை அந்த மகாவிட்ணுவாலும் தவிர்க்க இயலவில்லை.  அந்தப் பன்றி வடிவில் அமைக்கப்பட்ட ஆய்வகத்தின் உள்ளே உயிர்களை அழிக்கக் கூடிய விஷக் கழிவுப் பொருள் ஒன்று தோன்றியது.

அதனை விஞ்ஞானிகளால் அழிக்க முடியவில்லை.  அந்தக் கழிவிற்கு ‘நரன்‘ என்று பெயரிட்டனர்.  அது அசுரத்தன்மையுடன் உயிர்களை வருத்தி அழிக்கத் துவங்கியது.  இந்த நரன் என்ற நஞ்சிடம் இருந்து தேவர்களையும் இருடிகளையும் காக்க வேண்டி, மகாவிட்ணு என்ற அந்த மாமன்னன், அந்த நரனைப் பூமிக்குஅடியிலேயே வைத்துப் புதைத்து அழித்தான்.

அவ்வாறு பூமியிலிருந்து தோன்றிய நரன் என்ற அசுரப் பொருள் பூமியால் அழிக்கப்பட்ட நாளைப் பூமியில் வாழும் உயிரினங்களும், மனிதர்களும், தேவர்களும் இருடிகளும் ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலை எழுந்து 3 முதல் 4.30 மணிக்குள் குளிர்ந்த கங்கை நீரில் குளித்து, பின்னர் புத்தாடை உடுத்தி, இனிப்பு உண்டு இந்தப் பூமியும் அதில் உள்ள நிலப்பகுதிகளும் காக்கப்பட்ட தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

உலக மக்கள் அனைவரும் நரன்-அசுரன் இறந்த நாளையும், பூதேவி காப்பாற்றப்பட்ட நாளையும், புத்தாடை உடுத்தி தீபங்களை வ(ரி)லியாக ஒளியேற்றி இனிப்பு உண்டு கொண்டாடிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

இருள் நீங்கட்டும்.

நல்லொளி உள்ளங்களிலும் உணர்வுகளிலும் நிறைந்திருக்கட்டும்.

 

அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

kalairajan26@gmail.com            9443501912

https://publications-kalairajan.blogspot.com/2018/10/blog-post_20.html 

https://archive.org/details/20251018_20251018_0251 

தீபாவளியைப் பற்றி புராணக் கதைகள் நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. தீபாவளிக்கும் மற்ற பண்டிகைகளுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. தீபாவளி நாளில், மக்கள் எண்ணெய்க் குளியல் எடுத்து, புதிய ஆடைகளை அணிந்து, இனிப்புகள் மற்றும் எண்ணெய் சார்ந்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் வானத்தில் பட்டாசுகளை வெடித்து, வானத்தை ஒளிரச் செய்து பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இவ்வாறு கொண்டாடப்படும் தீபாவளி தொடர்பான கதையைப் படிக்கும்போது, ​​அது ஒரு புவியியல் ஆய்வு முடிவு, புவி அறிவியல் நிகழ்வு மற்றும் பூமியில் உயிரினங்கள் காப்பாற்றப்பட்ட ஒரு நிகழ்வின் கொண்டாட்டமாகும். எனவே, இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு வார்த்தைகளை மாற்றி தீபாவளி கதையை எழுதியுள்ளேன்.
அன்பான நண்பர்களே, இதைப் படித்து உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

[1] காசிஸ்ரீ, முனைவர், கி. காளைராசன்,  kalairajan26@gmail.com, 9443501912


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக