ஞாயிறு, 26 மே, 2019

மதுரைக்கு வந்த சுனாமி, பகுதி – 4, மதுரையைக் கடல் வௌவியது:

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4)
மதுரையை வங்கக் கடல் வௌவியது:

2004ஆம் ஆண்டு தமிழகத்தைச் சுனாமி தாக்கியது. ஆனால் இதைப்போலப் பல ஆயிரம் மடங்கு பெரிதான மிகப்பெரிய சுனாமி தோன்றி மதுரையை அழிந்தது பற்றித் திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் விரிவாகக் கூறுகிறது.

பேய்களும் கண்ணுறங்கும் நடு இரவில், குருட்டு இருளில் வங்கக் கடலில் பிரளயம் உண்டானது.  இதனால் நிலம் நடுக்கியது.  வங்கக் கடல் பொங்கி எழுந்தது.  கடல்  அலைகள் அண்டகூடம் முழுதும் ஊடுருவிச் சென்றன. கடல் வெள்ளம் பெருகி ஆரவாரித்து விண்ணுயர எழுந்தது.  மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் அஞ்சுமாறு பெரிய கரிய மலை போல் அலைகள் தோன்றி எழுந்து வந்தன.
நஞ்சு பொருந்திய வாயினையும், கரிய உடலையும் உடையது இராகு என்னும் பாம்பு.  இந்தக் கொடிய பாம்பானது ஞாயிறுடன் திங்கள் சேரும்போது (சூரிய கிரகணம்) விரைந்து விழுங்கிவிடும்.  அதைப் போன்று, மரக்கலங்கள் செல்லும் கடலின் வெள்ளமானது,  மாடங்களையுடைய மதுரையை விரைந்து விழுங்கியது.
வட்டமாகிய ஆமைகளைக் கேடயங்களாகவும், வாளை மீன்களை வாட்படைகளாகவும்,  மகரமீன்களை யானைப் படைகளாகவும்,  பரந்த அலைக் கூட்டங்களைத் தாவுகின்ற குதிரைப் படையாகவும், கடலில் மிதந்த தோணிகளைத் தேர்ப் படைகளாகவும் கொண்டு கடல் அலைகள் தோன்றி எழுந்தன.  வானளவிய கோட்டை மதில் சூழ்ந்த மதுரையின் கிழக்குத் திசையில் உக்கிர பாண்டியன்மேல் போருக்கு எழுந்ததைப் போன்று பிரளயத்தில் தோன்றிய கடல் வெள்ள அலைகள் வானுயரத் தோன்றி வந்தன.

தொடரும்...

கட்டுரையாளர் – காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன், kalairajan26@gmail.com,  9443501912
நாள் – வைகாசி 13 (27.05.2017) சனிக்கிழமை

குறிப்பு - கட்டுரையாளர் தான் படித்த திருவிளையாடற் புராணம் பாடல்கள், நேரில் பார்த்த மண் மற்றும் மலைகளின் அமைப்புகள், கூகுள் புவிப்படங்கள் இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று இயைபு உடையனவாக உள்ளன என்ற கருதுகிறார்.  மதுரை மணவூர் (கீழடி) மற்றும் தமிழகம் முழுமையும் சுனாமியால் அளித்துள்ளன என்ற  கருத்தை இக் கட்டுரையில் பதிவு செய்கிறார்)

பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்துப் பாடியருளிய பிரளயம் கூறும் திருவிளையாடற் புராணப் பாடல்கள் சில.

1037.
பொருங்கடல்வேந்தனைக்கூவிப்பொள்ளென இருங்கடலுடுத்தபாரேமுமூழிநாள் ஒருங்கடுவெள்ளமொத்துருத்துப்போய்வளைந் தருங்கடிமதுரையையழித்தியாலென்றான்.

1038.
விளைவதுதெரிகிலேன்வேலைவேந்தனும்
வளவயன்மதுரையைவளைந்திட்டிம்மெனக்
களைவதுகருதினான்பேயுங்கண்படை
கொளவருநனந்தலைக்குருட்டுக்கங்குல்வாய்.

1039
கொதித்தலைக்கரங்களண்டகூடமெங்குமூடுபோய்
அதிர்த்தலைக்கவூழிநாளிலார்த்தலைக்குநீத்தமாய்
மதித்தலத்தையெட்டிமுட்டிவருமொரஞ்சனப்பொருப்
புதித்ததொத்துமண்ணும்விண்ணுமுட்கவந்ததுததியே.

1040
வங்கவேள்வெள்ளமாடமதுரைமீதுவருசெயல்
கங்குல்வாயதிங்கண்மீதுகாரிவாயகாருடல்
வெங்கண்வாளராவிழுங்கவீழ்வதொக்குமலதுகார்
அங்கண்மூடவருவதொக்குமல்லதேதுசொல்வதே.

1041
வட்டயாமைபலகைவீசுவாளைவாள்கள்மகரமே
பட்டயானைபாய்திரைப்பரப்புவாம்பரித்திரள்
விட்டதோணியிரதமின்னவிரவுதானையொடுகடல்
அட்டமாகவழுதிமேலமர்க்கெழுந்ததொக்குமே.

1042
இன்னவாறெழுந்தவேலைமஞ்சுறங்குமிஞ்சிசூழ்
நன்னகர்க்குணக்கின்வந்துநணுகுமெல்லையரையிரா
மன்னவன்கனாவின்வெள்ளிமன்றவாணர்சித்தராய்
முன்னர்வந்திருந்தரும்புமுறுவறோன்றமொழிகுவார்.

நன்றி
(1) மேலேயுள்ள படமானது இணையத்தில் இருந்து எடுக்கப் பெற்றது. படத்தைப் பதிவு செய்தோருக்கு நன்றி.
(2) திருவிளையாடற்புராணம் பாடல்களை இணையத்தில் பதிவு செய்துள்ள தமிழ்இணையப் பல்கலைக்கழகத்திற்கு நன்றி.
(3) கூகுள் மேப் வழங்கிய புவிப்படத்திற்கு நன்றி.